Monday, September 26, 2011

சில மனிதர்களும் சில நினைவுகளும்




எளிமையின் சிகரம்
பி.எஸ்.எ.ரஹ்மான்




கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவமனை ஜலால் மருத்துவமனை. இந்த மருத்துவ மனையின் நிறுவனர் எனது மாமனார் எஸ்.எ.இப்ராஹீம் அவர்கள். கிட்ட தட்ட இருநூறு படுக்கை வசதி கொண்ட மிகவும் பிரபலமான மருத்துவமனை இது. சில உயரிய  காரணங்களால் இந்த மருத்துவமனையை முஸ்லிம் சமுதாய நலனை மனதில் கொண்டு ஒரு கலை கல்லூரியாக மாற்றி அமைக்க அவர் எண்ணினார்.. உடனடியாகவே அதற்கான முயற்சிகளிலும் துணிந்து இறங்கினார். முஸ்லிம் கலை கல்லூரி என்ற பெயரில் அது செயல் பட துவங்கியது. அக்கல்லூரியின் நிர்வாகியாகவும் , தாளாளராகவும் அவர் செயல் பட்ட காலம் அது. எண்பத்திநாலு அல்லது எண்பத்தி ஐந்து ஆண்டு துவக்கத்தில் என்று எண்ணுகிறேன். அந்த நேரம் ஹபீப் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றை தக்கலை பகுதியில் நான் நடத்தி வந்தேன்.குழந்தைகள் நல  மருத்துவநிபுணராக  நான்   அங்கு பணியாற்றி கொண்டிருந்தேன். மிகவும் பிசியாக நான் இருந்த காலகட்டம் அது. முதலமைச்சர் சத்துணவு உயர் மட்ட குழு உறுப்பினர், மாநில ஹஜ்ஜ் குழு உறுப்பினர், வக்ப் வாரிய விசாரணைக்குழு உறுப்பினர்,, ஜனாதிபதி தேசிய விருது தேர்வு குழு உறுப்பினர், இந்திய மருத்துவ சங்க செயலாளர் என்று அடுக்கடுக்கான பல பதவிகளை நான் சுமந்து கொண்டிருந்த நேரம் அது.






இன்றும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஒரு நாள் மருத்துவ மனையில் நான் மிகவும் பிசியாக இருந்த நேரம் எனது மாமா அவர்கள் என்னை தேடி வந்தார்கள். அவரது நெருங்கிய நண்பர் ர் பி.எஸ்.எ.ரஹ்மான் அவர்கள் நாகர்கோயில் வர இருப்பதாகவும்  அவருக்காக ஒரு நிகழ்ச்சியை அவரது கல்லூரியில் ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என்றும் என்னை பணித்தார்கள். நான் வருவதாக ஒப்பு கொண்டேன்.அடுத்த நாள் நிகழ்ச்சி அரங்கிற்கு குறித்த நேரத்தில் சென்றேன். ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு முன்பாகவே பி.எஸ்.எ. அவர்கள்,  அவர்கள்  நண்பர்களுடன் அங்கே வந்து  அமைதியாக காத்து இருந்தார்கள். அவர்களுடன் அன்றய வக்ப் வாரிய தலைவர் ஜனாப். ரஸ்ஸாக் அவர்கள், மெஜெஸ்டிக் மோட்டார்ஸ் நிர்வாகி ஜனாப்.கரீம் சாஹிப் மற்றும் சிலரும் வந்து இருந்தனர். எனக்கு அப்போது பி.எஸ்.எ. அவர்களை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. ஒரு தொழில் அதிபர் என்று மட்டும் அறிந்து வைத்திருந்தேன். எனவே எனது மாமாவின் சிறந்த நண்பர் என்ற முறையில் அவரை பற்றி ஒரு சிறு அறிமுக உரையை நிகழ்த்தினேன். அன்றய நிகழ்ச்சியில் அவர்கள் இரண்டு லட்சம் ரூபாயை கல்லூரிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்கள். கூட்டம் முடிந்த பின்னர் பி.எஸ்.எ. அவர்கள் திருவிதாங்கோட்டில் உள்ள எனது மாமனார் வீட்டில் இரவு விருந்து சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கி இருந்தார்கள். அவரை பார்க்க வந்திருந்த ஊர் பிரமுகர்களுடன் சரிசமமாக அமர்ந்து அவர்  உரையாடிக்கொண்டு இருந்தது என்னை மிகவும் அதிசயக்க வைத்தது.






சாப்பாடு வைபவங்கள் முடிந்த பின்னர்   சிறிது நேரம் அவர்களுடன் இருந்து பேசிவிட்டு விடைபெற எண்ணிய நான் அவர்கள் அருகில் சென்று  O.KAY- நான் போய் வருகிறேன்.''we will meet' என்று ஆங்கிலத்தில் சொல்லி விடை பெற முயன்றேன் அப்போது அவர்கள் உதிர்த்த நகைச்சுவை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அவர்கள் சொன்னார்கள் ''already enough meat in the plate'. வார்த்தை விளையாட்டில் வித்தகர் அவர் என்பதை நான் எளிதில் புரிந்து கொண்டேன். எனது மாமா வீட்டில்  தொழுகை அறையில் அவர் இருந்த முறை என்னை மேலும் சிலிர்க்க வைத்தது. சாதாரண லுங்கியில், கை வைத்த ஒரு பனியனை அணிந்து கொண்டு சாதாரண மனிதர்களுடன் சரி சமமாக அமர்ந்து சிரித்து கலகலப்பாக பேசிய, பழகிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மகா மனிதர் இவர் என்பதை அவர் செயல் பாடுகள் எனக்கு தெளிவாக உணர்த்தின. காட்சிக்கு எளியவராக இருந்த அந்த பெரியவர் ஒரு கோடீஸ்வரர் என்பதை எவராலும் யூகிக்க இயலாத அளவுக்கு அவரது வெளி தோற்றம் அமைந்து இருந்தது. இரவு அங்கேயே படுத்து உறங்கிவிட்டு அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் அவர்கள் புறப்பட்டு சென்றார்கள். அதிகாலையில் தக்கலையில் என் வீட்டு முன்பு ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்றது. அதில் வந்து இறங்கியவர் எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு பெரிய போலிஸ் அதிகாரி. என்ன சார், அதிகாலையில் வந்து இருக்கிறீர்கள் - என்ன விஷயம் என்று கேட்டேன். அவர் சொன்னார். பி.எஸ்.எ. ஒரு பொருளை உங்கள் வீட்டில் தவற விட்டு போய் விட்டார். அதை எடுத்து கொண்டுபோய் அவரிடம் கொடுக்க வேண்டும் - அதற்காகவே மெனக்கெட்டு நானே வந்தேன் என்று அவர் கூற எனக்கு அவர் மீது சற்று கோபம் ஏற்பட்டாலும் , அந்த பெரியவர் மீது அந்த அதிகாரி வைத்திருந்த அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் என்னை மிகவும் வியக்க வைத்தது.எம்.ஜி.ஆர்.அவர்களும், கலைனர் அவர்களும் கூட பி.எஸ்.எ. .அவர்களிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள் என்று அந்த போலிஸ் அதிகாரி மேலும் சொல்ல நான் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன்.




இந்த சிறப்புக்கு உரிய மனிதரை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று நான் மனமார விரும்பினேன். அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் எனக்கு கிடைத்தது. நாகர்கோயிலில் 'ஐக்கிய பொருளாதார பேரவை' யின் கிளை ஒன்றை துவக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கான நிகழ்ச்சி ஒன்றிற்கு நாகர்கோயில் ரோட்டரி கம்யூனிட்டி சென்டரில் நாங்கள் சில பேர் சேர்ந்து ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். டாக்டர்.அப்துல் காதர், அகமத்கான்,இஸ்மாயில்,ஹமீது உட்பட மொத்தம் பத்தொன்பது பேர் உறுப்பினர்களாக இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினோம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பி.எஸ்.எ. அவர்கள் நாகர்கோயில் வந்தார்கள். முஸ்லிம் மக்களின் சமூக,பொருளாதார,கல்வி மேம்பாட்டுக்காக அவர்கள் செதுக்கிய அருமையான திட்டம் இது. ரோட்டரி கிளப் போல், லயன்ஸ் கிளப் போல் இதை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் மிகவும் ஆசை பட்டார்கள். சில சுயநல கும்பலின் மேலாதிகத்தால் அவர்களின் கனவு முழுமையாக நிறைவேறவில்லை.




பிறகு சென்னையில் பல திருமண விழாக்களில் அவர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். என்றாலும் ஒரு முக்கிய சம்பவம் இன்னும் என் மனதில் நிழலாடிகொண்டிருகின்ற்றது. என்னுடைய நெருங்கிய நண்பரும், மூத்த ஐ.எ.எஸ். அதிகாரியுமான திரு.ஈ.அஹமத் அவர்கள் திடீர் என்று சென்னையில் வைத்து காலமாகி விட்டார்கள். காலையில் அவர்களின் வீட்டிற்கு நான் என் நண்பர் முனீர் ஹோடா வுடன் சென்று இருந்தேன். ஆற்காடு நவாப் முகம்மது அலி உட்பட பெரும்திரளான வி.ஐ.பி.பிரமுகர்கள் அங்கே கூடியிருந்தனர். அங்கே நான் கண்ட அதிசயம் என்ன வென்றால் பி.எஸ்.எ. அவர்கள் அந்த வீட்டின் ஒரு மூலையில் சாதாரணமாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களை அஹமத் அவர்களின் பிள்ளைகளுக்கு கூட அடையாளம் தெரியவில்லை. தகவல் தெரிந்த உடனேயே, வெளிநாட்டில் இருந்த அவர்கள் தனது எல்லா அலுவல்களையும் புறம் தள்ளிவிட்டு தனது நண்பரின் மரணத்தில் பங்கு கொள்ள சென்னை வந்தது அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியது. எளிமையும், கம்பீரமும் இணைந்த இந்த பெருமகனை எண்ணும்போது நெஞ்சம் இனிக்கிறது. சுகமான நினைவுகள் மனதுக்கு இதமளிக்கின்றன.








2 comments:

  1. ஆம், மிகவும் எளிமையான மனிதர். 90களில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோதும் உணர்ந்தேன். தற்போது ஞாபகமறதி நோயால் தனிமையில் அவதியுறுகிறார் என்று கேள்விப்பட்டது உண்மையான செய்தியா என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

    ReplyDelete
  2. அஸ்ஸலாம் அலைக்கும்.மருத்துவர் அவர்களின்,இந்த மாமனிதரைப் பற்றிய நிகழ்வினை அறிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.பி.எஸ்.எ அவர்களுடன் ஒருமுறை எனக்கு ஏற்பட்ட
    சந்திப்பினை இங்கு பகர்வதில் பரவசம் அடைகிறேன்.1987-ல்
    நான் மக்காவில் அல்நூர் மருத்துவமனயில் பணியாற்றும் போது, இறையருள் கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களும்,அவர் புதல்வரும் உம்ரா செய்ய வந்திருந்தனர்.பின்னர் நாங்கள் அனைவரும் பி.எஸ்.எ. அவர்களை காண ஜெத்தாவில் அவர் அலுவலகத்திற்கு சென்றோம்.பேராசிரியர்.கபூர் அவர்கள் பி.எஸ்.எ அவர்கள் நடத்திய கல்லூரியின் முதல்வரும்,அவருடைய நெருங்கிய
    நண்பரும் ஆவார்.எங்களை கண்டவுடன் அகமக வரவேற்று,அவர்கள் வீட்டில் மதிய உணவிற்காய் அழைத்து சென்றார்கள்.அவரின் எளிமையும்,விருந்தோம்பலும் எம்மை வியக்க வைத்தது.ஏதோ நெருங்கிய உறவினர் போன்று என்னிடம் அளவளாவியது அற்புத படுத்தியது.இவ்வளவு பணிகளுக்குமிடையில் ,எங்களுக்கு பணிவிடை செய்த பண்பை எப்படி பாராட்டுவது?சமீபத்தில் அவர் உடல்நிலை
    சரியில்லாமல் இருப்பதாக அறிந்து கவலை உற்றேன்.இம்மையிலும் ,மறுமையிலும் வெற்றியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

    ReplyDelete